விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை உயிருடன்
விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை உயிருடன் பிடிப்பது சாத்தியமற்றது - இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரை இலங்கை அரசாங்கம் கைது செய்யும் என்பதனை தான் நம்பவில்லை என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றின் வர்த்தக நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் எதனையும் சமாளிக்கும் தன்மையும், மீண்டும் தனது முன்னைய நிலையை விரைவாக அடையும் தன்மையும் கொண்டவர்.வேலுப்பிள்ளை பிரபாகரனை இலங்கை அரசாங்கம் கைது செய்தால் இந்தியாவுக்கு அவரை நாடுகடத்தலாம் என்று நான் கருதுகின்றேன். வேலுப்பிள்ளை பிரபாகரன் எழுபதுகளில் பிற்பகுதியில் இருந்து செயற்பட்டு வருவதுடன், உயிர்தப்பியும் வருகின்றார்.
அவர் எப்போதும் எந்த சூழ்நிலைக்கும் தன்னை இயல்பாக்கும் தன்மையையும், மீண்டும் பழைய நிலைக்கு விரைவாக திரும்பும் தன்மையையும் உடையவர். எனவே அவர் அதனைத் தொடருவார் என்று நான் நம்புகின்றேன்.எனினும் எமக்கு வேலுப்பிள்ளை பிரபாகரனின் மீது பெரும் ஈடுபாடு கிடையாது.ஆனால் அரசியல் தீர்வு ஒன்று காணப்பட வேண்டும் என்றே நாம் விரும்புகின்றோம். எனவே இலங்கை அரசாங்கத்தினை அமைதி வழிக்கு கொண்டு வருவதற்கான முற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம்.
வேலுப்பிள்ளை பிரபாகரனை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பாக நாம் அக்கறை கொள்ளவில்லை. ஆனால் கேள்வி என்னவெனில் உங்களால் வேலுப்பிள்ளை பிரபாகரனை உயிருடன் பிடிக்க முடியுமா? இல்லையா? என்பது தான். அது முடியுமா? இல்லையா? என்பது தொடர்பாக என்னால் உறுதியாக எதனையும் கூற முடியாது.
விடுதலைப் புலிகளை இலங்கை அரசாங்கம் தடை செய்தால் அது அரசியல் தீர்வு முயற்சியை மேலும் பின்னுக்கு தள்ளலாம். அதனால் அரசாங்கம் தற்போது எதனைச் சாதிக்கப் போகின்றது என்பது தொடர்பாக என்னால் எதனையும் உறுதியாகக் கூறமுடியாது. ஆனால் என்ன செய்ய வேண்டும் என்பதனை அவர்கள் தீர்மானிக்கட்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் ஒ பிளேக் அவ் நேர்காணலில் தெரிவித்துள்ளார்.