தமிழ் மொழி உலகெங்கும் வியாபித்துள்ள போதிலும்
தமிழ் மொழி உலகெங்கும் வியாபித்துள்ள போதிலும் சிங்களமொழி இலங்கைக்குள் வரையறுக்கப்பட்டுள்ளது - விமல் வீரவன்ச கவலை
சிங்களமொழியில் சட்டத்துறையினை பயில்வதற்கு தடைவிதிக்கப்படுகின்றது. 20 வருடங்களுக்கு முன்னர் இந்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சட்டத்துறையினை தேர்ந்தெடுத்திருக்க மாட்டார் என்று ஜே.வி.பி.யின் பிரசார செயலாளரும் எம்.பி.யுமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
கொழும்பு பண்டாரநாயக்க கற்கை நிலையத்தில் இடம்பெற்ற தேசிய மொழி அதிகார சபையின் அறிக்கை வெளியீட்டு விழாவிலேயே விமல் வீரவன்ச எம்.பி. இதனைத் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் சர்வதேச தாய்மொழி தினமாக உலகம் முழுதும் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பங்களாதேஷின் இலங்கைக்கான தூதுவர் சாதாத் ஹுசேன் கலந்து கொண்டிருந்ததுடன் சபாநாயகர் வி.ஜே.மு. லொக்கு பண்டார கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது தேசிய மொழி அதிகாரசபையின் அறிக்கையின் முதற்பிரதி தூதுவர் சதாத் ஹுசேனிடம் வழங்கப்பட்டது. இங்கு தொடர்ந்தும் விமல் வீரவன்ச எம்.பி. மேலும் கூறியதாவது:எமது தாய்மொழி காப்பாற்றப்பட வேண்டும். மாறாக அது அற்றுப்போவதற்கு வழிவகுக்கக்கூடாது. தேசப்பற்றுள்ளவர்கள் என்ற வகையில் எமது தாய்மொழியை நாம் நேசிக்கின்றோம். தமிழ் மக்களுக்கான தமிழ்மொழி இலங்கையில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் வியாபித்திருக்கின்றது.
ஆனால், சிங்களமொழியானது இலங்கைக்குள் வரையறுக்கப்பட்டிருக்கின்றது. காரணம் இலங்கை வாழ் சிங்களவர்கள் மட்டுமே சிங்கள மொழியை பேணி வருகின்றனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் இலங்கையில் சட்டத்துறையில் கற்பவர்களுக்கு சிங்களமொழி இல்லாமல் செய்யப்பட்டிருப்பதாக அறிய முடிகின்றது.
இது உண்மையில் சிங்களமொழியை அற்றுப் போகச் செய்யும் செயலாகும். கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் இந்த நடைமுறை அமுல்படுத்தப்பட்டிருந்தால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் சட்டத்துறையில் தேர்ச்சியடைந்திருக்க முடியாது. அவர் அதனை தேர்ந்தெடுத்திருக்கவும் மாட்டார். எமது நாட்டில் சிங்களமொழியான தாய்மொழிக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதிகளை இல்லாது செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே தேசியமொழி அதிகாரசபையின் அறிக்கை வெளியிட்டு வைக்கப்படுகின்றது.