மன்னாரில் படையினர், புலிகள் தொடர்ந்து கடும் மோதல் பலத்த இழப்புகள்; இருதரப்பும் பரஸ்பரம் தெரிவிப்பு
மன்னாரில் நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை நடைபெற்ற கடும் மோதலில் விடுதலைப் புலிகளுக்கு பலத்த சேதமேற்பட்டுள்ளதாக படையினர் தெரிவித்துள்ள அதேநேரம், கடந்த 24 மணிநேரத்தில் தங்கள் தாக்குதலில் எட்டுப் படையினர் கொல்லப்பட்டும் 40க்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
மன்னாரில் விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலைகள் மீது புதன்கிழமை மாலை படையினர் நடத்திய தாக்குதலில் ஐந்து பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டதாகவும் 13 புலிகள் வரை கொல்லப்பட்டிருக்கலாமெனத் தெரியவருவதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.
இதேநேரம், மன்னாரில் படையினர் மேற்கொண்ட சினைப்பர் தாக்குதலில் மூன்று புலிகள் கொல்லப்பட்டதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த மோதல்களில் தங்கள் தரப்பில் இரு படையினர் கொல்லப்பட்டதாகவும் படையினர் கூறியுள்ளனர்.
இதேநேரம், புதன்கிழமை காலை முதல் நேற்று வியாழக்கிழமை காலை வரையான 24 மணிநேரத்தில் பரப்பான்கண்டல், உயிலங்குளம், பாலைக்குழி பகுதிகளில் எட்டு இராணுவத்தினர் கொல்லப்பட்டும் 40 படையினர் படுகாயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
சினைப்பர் தாக்குதல், பொறிவெடிகள் மற்றும் மிதிவெடிகளில் சிக்கியே படையினருக்கு இந்த இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் புலிகள் தெரிவித்தனர்.
நேற்றும் இந்தப் பகுதிகளில் இருதரப்புக்குமிடையே கடும் ஷெல்த் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.