பூநகரியில் விமானக்குண்டு வீச்சு 8 பொதுமக்கள் பலி
பூநகரிப் பகுதியில் சிறிலங்காவின் வான் தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட 8 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 13 பேர் படுகாயமடைந்துள்ளனர். ( படங்கள் கோரமான காட்சிகளைக் கொண்டவை)
கிளிநொச்சி மாவட்டம் பூநகரிப் பகுதியில் சிறிலங்கா வான்படை இன்று நடத்திய வான்குண்டுத் தாக்குதலில் 8அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.13பேர் படுகாயமடைந்துள்ளனர்
ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் உதவி செயலாளர் இலங்கை வருகை நாளை மறுதினம் மட்டக்களப்புக்கு விஜயம்
ஐக்கிய நாடுகளின் முகவர் நிறுவனங்களால் இலங்கையில் மேற்கொள்ளப்படும் பணிகளை மீளாய்வு செய்வதற்காக அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நா.வின் உதவி செயலாளர் நாயகம் அஞ்சலா கனே நேற்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
ஒருவார காலம் இலங்கையில் தங்கியிருக்கும் அஞ்சலா கனே ஐ.நா. முகவர் நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் மனித நேய, நிவாரண, புனர்வாழ்வு, அபிவிருத்தி பணிகளை மீளாய்வு செய்வார். அத்தோடு சந்திப்புக்களையும் மேற்கொள்வார் என்று கொழும்பிலுள்ள ஐ.நா. தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் யு.என்.எச்.சி.ஆர். யுனிசெப் உலக உணவுத் திட்டம், யு.என்.டி.பி. ஐ.ஓ.என். உள்ளிட்ட ஐ.நா. முகவர் அமைப்புக்களின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதிகளுடன் அஞ்சலா கனே விரிவான கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவை அமைச்சில் சந்திக்கும் அஞ்சலா கனே ஐ.நா. முகவர் நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கான ஒத்துழைப்புக்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இதேவேளை நாளை மறுதினம் சனிக்கிழமை உள்நாட்டுப் போர் மற்றும் சுனாமிப் பேரலையால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவடடத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக ஐ.நா.வின் உதவிச் செயலாளர் நாயகம் அஞ்சலா கனே ஐ.நா. முகவர் நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் இடம்பெயர்ந்த மக்களுக்கான மீள்குடியமர்த்தல் புனர்வாழ்வு, புனரமைப்பு நிவாரண நடவடிக்கைகளை ஆய்வு செய்வதோடு வீடமைப்பு திட்டங்களையும் பார்வையிடவுள்ளார்.
எதிர்வரும் 25ஆம் திகதி கொழும்பில் அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவை சந்திக்கும் அஞ்சலா கனே நாட்டின் மனித உரிமைகளின் நிலை தொடர்பாகவும் கலந்துரையாடவுள்ளார்.
இதேவேளை, தனது விஜயத்தின் ஒரு பகுதியாக அமெரிக்கா, நோர்வே, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய இணைத் தலைமை நாடுகளின் தூதுவர்களையும் அஞ்சலா சந்தித்து பேசவுள்ளார். அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இந்திய உயர் ஸ்தானிகர் அலோக் பிரசாத், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பஸில் ராஜபக்ஷ, சர்வதேச வர்த்தக மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சர் ஜி.எல்.பிரீஸ், அமைச்சரும் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுத்தலைவருமான திஸ்ஸ விதாரண ஆகியோரையும் அஞ்சலா கனே சந்தித்து பேசவுள்ளார்.
இதேவேளை, சர்வதேச அரச சார்பற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சிவில் சமூக அமைப்பு பிரதிநிதிகளையும் அஞ்சலா கனே சந்திப்பார் என கொழும்பில் ஐ.நா. தலைமை அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன [மேலும்]