புலிகளை ஆதரிக்கும் திருமாவளவன் மீது நடவடிக்கை
புலிகளை ஆதரிக்கும் திருமாவளவன் மீது நடவடிக்கை எடுத்தால் அழகிரி மீதும் நடவடிக்கை எடுக்க நேரிடும் - ஜெயலலிதா குற்றச்சாட்டு
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசிய திருமாவளவன் மீது நடவடிக்கை எடுத்தால் தனது மகன் அழகிரியின் மீதும் நடவடிக்கை எடுக்க நேரிடு÷மா என்று முதலமைச்சர் கருணாநிதி அஞ்சுவதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தனது மகன் அழகிரியின் பிறந்த நாளையொட்டி மதுரையிலும் தென் மாவட்டங்களிலும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் இராணுவ உடையில் அழகிரியின் தலையை ஒட்டி களப்போராளி என்ற டிஜிட்டல் பதாதைகள் வைக்கப்பட்டுள்ளன.இக்காரணத்தால் ஒரு வேளை திருமாவளவன் மீது நடவடிக்கை எடுத்தால் தன் மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி வருமே என்று பயந்து போய்தான் கருணாநிதி பதுங்கி பதுங்கி பேசி சமாளிக்கப்பார்க்கிறார்.திரும்பத் திரும்ப வார்த்தை ஜாலம் காட்டி பேசுகிறாரே தவிர,விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற உள்ளார்ந்த எண்ணம் கருணாநிதிக்கு இல்லை.
தடை செய்யப்பட்ட எந்தவொரு இயக்கத்திற்கும் ஆதரவாக பேசப்படும் பேச்சு குற்றம் ஆகாது என்று எந்த ஒரு வரியும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் சொல்லப்படவில்லை என்பதை நான் ஆணித்தரமாக கடந்த சட்டசபையில் தெரிவித்தேன். இந்த உண்மையை பொறுத்துக்கொள்ள முடியாத கருணாநிதி அந்த தீர்ப்பில் உள்ள ஒரு பகுதியை குறிப்பிட்டு சோணகிரி அறிக்கை என்ற பெயரில் மறுபடியும் பொய்த் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில்கூட, தடைசெய்யப்பட்ட எந்தவொரு இயக்கத்திற்கும் ஆதரவாக பேசப்படும் பேச்சு குற்றம் ஆகாது என்று தெரிவிக்கப்படவில்லை.அவரது தவறை அவரே ஒப்புக்கொள்கிறார். நான் சட்ட சபையில் கேட்ட எந்த கேள்விகளுக்கும் கருணாநிதி இதுவரை பதிலளிக்கவில்லை. இப்போது கேட்கப் போகும் கேள்விகளுக்கு பதில் அளிக்கப் போவதில்லை.
தற்போது பொடா சட்டம் அமுலில் இல்லை.பொடா சட்டத்தை ரத்து செய்தபோதே நான் மேற்கொண்ட விடாமுயற்சியால் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச்சட்டத்தில் சில திருத்தங்கள் சேர்க்கப்பட்டன.திருத்தியசட்டத்தின்படியேவிடுதலைப் புலிகள்இயக்கம்தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த சட்டத்தின் பிரிவு 39 இன்படி தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரிப்பது குற்றம். அதற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை உண்டு.
பொடா சட்டம் குறித்து தான் கூறிய கருத்து சரி என்ற வகையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் ஒரு பகுதியை கருணாநிதி வெளியிட்டிருக்கிறார். அதில் "என்கரேஜிங் ஓர் பொதரிங்' என்ற வார்த்தைகள் வருகின்றன. இதற்கு தமிழில் ஆக்கமும் ஊக்கமும் கொடுப்பது என்று பொருள். தடை செய்யப்பட்ட அமைப்பை ஆதரித்து பேசினால்கூட அது பயங்கரவாத அமைப்பிற்கு பிரசாரம் செய்ததாகத்தான் பொருள்.வாய்மொழியால் பிரசாரம் செய்தாலே,தடைசெய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆக்கமும் ஊக்கமும் அளிப்பதாகத்தான் அர்த்தம். எப்படிப் பார்த்தாலும் கருணாநிதியின் கூற்றும் தவறு. துரைமுருகனின் கூற்றும் தவறு.விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசினாலோ, பிரசாரம் செய்தாலோ சட்டப்படி அது குற்றமாகும் என்று தெரிவித்துள்ளார்.